‘‘அம்மம்மா என்னை பேசிக்கொண்டே இருப்பார்.. அதனால் இருவரையும் கொலை செய்தேன்..” பேத்தி அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு வயோதிபப் பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் 68 வயதுடைய சிறிதரன் ராஜேஸ்வரி  74 வயதுடைய சக்திவேல் ராஜகுமாரி   ஆகிய இரு பெண்களே உயிரிழந்திருந்தனர்.

 

மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி, சம்பவம் இடம்பெற்ற தினமான  நேற்று அதிகாலை மூதூர் வைத்தியசாலையில்  இரவுக் கடமைக்காக சென்றிருந்துள்ளார்.

குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர்  வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில்  முகமூடி அணிந்துவந்தவர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வீட்டில் இருந்த சிறுமி அயலவர்களுக்கு  நேற்று அதிகாலை தகவல் வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில்,  15 வயதான சிறுமி சிறு காயங்களுடன் அயலவர்களால் மீட்கப்பட்டு, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அம்மம்மா தன்தை தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதாலும், தன் மீது பாசம் காட்டுவதில்லை எனவும் இதனால் கோபமடைந்து மன விரக்தியில் இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது  மேலதிக நடவடிக்கைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.